கோம்பை S அன்வர்

1930களில் நாகூரில் உள்ள செட்டியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும், இளம் மாணவனாக, இஸ்லாமிய பிரார்த்தனைப் பாடலை பாட ஆரம்பித்த E M ஹனீபா விரைவில் அது தன் வாழ்நாள் தொழிலாக மட்டுமின்றி, ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் அழைப்புக் குரலாகவும், கோடானு கோடி தமிழர்களின் அபிமான குரலாகவும் மாறும் என்று நினைத்திருக்க மாட்டார். ஏனென்றால் அவருக்கு இசையில் முறையான பயிற்சி இல்லை.
1925 டிசம்பர் 25 ஆம் தேதியன்று இராமநாதபுரத மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் பிறந்த ஹனீபா, வளர்ந்தெதெல்லாம் தந்தையின் ஊரான, நாகூரில். மலேசியாவில் பணிபுரிந்த தந்தை, கிராமபோன் ஒன்றை வீட்டிற்கு கொண்டு வர, கவ்வாலி இசையிலும், அன்று பிரபலமான தமிழ் இஸ்லாமிய பாடகர் காரைக்கால் A M தாவூத்தின் இசை தட்டுக்களையும் கேட்டு தன் இசை ஞானத்தை மெருகேற்றிக் கொண்டார்.
இளம்வயதாயினும், ஹனீபாவின் அட்சர பிழையின்றி கணீரென்று ஒலிக்கும், மனதைக் கவரும் குரலினால் ‘நாகூர் கவ்தியா பைத்து சபை’யின் முன்னிலைப் பாடகராக, திருமண ஊர்வலங்களிலும், மேடைகளிலும் மற்றும் மீலாது நபி போன்ற சமூக நிகழ்ச்சிகளிலும் அவருக்கு பாட வாய்ப்புக் கிடைத்தது. பின்னாளில் தனது நண்பரான நாகூர் தர்கா வித்வான் SMA காதர் அவர்களுடைய உதவியுடன் கர்நாடக இசையில் தனது ஞானத்தை வளர்த்துக் கொண்டார்.
தனது சிறு வயதில், மலேசியாவில் வேலை செய்து வந்த தந்தைக்கு, அவர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, சுயமரியாதை இயக்க ஏடான பெரியாரின் “குடி அரசு” மற்றும் தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியை போதித்த பா தாவூத் ஷாவின் “தாருல் இஸ்லாம்” ஆகிய பத்திரிக்கைகளை வாங்கி அனுப்புவது ஹனீபாவின் வழக்கம். அனுப்பும் முன்னர் அவற்றை ஆர்வமாக படிக்க, சுயமரியாதை இயக்கத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் தாக்கம், 1939-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கறுப்புக்கொடி காட்டுமளவுக்கு ஹனீபா மாறினார்.
திருவாரூரில் உறவினர் கடையில் வேலை செய்ய சென்ற போது, ஹனீபாவைப் போலவே, மேடையில் ஏறி இளம் வயதிலேயே சுயமரியாதை கருத்துக்களை முழங்கிய முத்துவேல் கருணாநிதியுடன் தொடர்பு ஏற்பட்டது. ஹனீபாவை விட ஏறக்குறைய ஓரிரண்டு வயது மூத்தவர் கருணாநிதி. 1940ல், திருவாரூரில் பெரியாரின் தலைமையில் நீதிக்கட்சி மாநாடு நடந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாநாட்டில் நாகூர் தொண்டர் படையுடன் பங்கேற்ற ஹனீபா, பெரியாரின் வேண்டுகோளை ஏற்று, சில மாதங்களுக்கு முன்னர் இலண்டனுக்குச் செல்லும் வழியில் விமான விபத்தில் மறைந்த, நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி.பன்னிர்செல்வத்தின் எதிர்பாரா சோக மரணம் குறித்து, “பரகதி சேர்ந்தனையோ பன்னீர்ச் செல்வமே”, என்று ஹனீபா பாட, கூடியிருந்த மக்கள் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.
1945 ஆம் ஆண்டு நாகூரில் மாணவர்கள் பிரசங்கப் பயிற்சிக் கழகம் எடுத்த விழா ஒன்றில் தமிழறிஞர் சண்முக தேசிகர் அவர்கள் நாகூர் ஹனிபா அவர்களுக்கு ‘இசைமுரசு’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள். அதுவே காலத்துக்கும் அவரோடு ஒட்டிக்கொண்டது.
தந்தை பெரியாரின் மயிலாடுதுறை – நாகை சுற்றுப்பயணங்களில் உடன் பயணித்து திராவிட இயக்கப் பாடல்களையும் பாடுவது ஹனீபாவின் வழக்கம். இருப்பினும் பேரறிஞர் அண்ணா 1949ல் தந்தை பெரியாரிடம் பிரிந்து, திராவிட முன்னேற்ற கழகத்தை துவங்கியவுடன், அதனை ஆதரித்து, தந்தி மூலம் முதல் வாழ்த்தினை தெரிவித்தது மட்டுமல்லாமல், அண்ணாவுடன் அரசியலில் ஐக்கியமாகி, திமுகவின் கொள்கைகளை, எழுச்சிமிக்க பாடல்களாக பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு செல்லத் தொடங்கினார்.
‘நம் நாடு’ பத்திரிகையில் வெளியான “அழைக்கின்றார் அண்ணா ..பாடலை ஹனீபா பாட வேண்டும் என்று கருணாநிதி விரும்ப, மேற்கொண்டு நடந்ததை கருணாநிதியே ஹனிபாவின் முத்து விழா மலர் (1993) வாழ்த்துரையில் விவரிக்கின்றார், “அழைப்பு விடுத்தேன் பாடச் சொல்லி! மெட்டு அமைத்து பாடிக் காட்டினார்! அந்தப் பாடல் அனிபாவுக்கு திருவாடுதுறை ராஜரத்தினத்திற்கு தோடி ராகம் போல! எங்கு சென்றாலும் அந்தப் பாடலை பாடச் சொல்கிறார்கள். நான் எழுதிய திரைப்படம் ஒன்றில் அந்தப் பாடலை அனிபாவே பாட வேண்டுமென்றேன், பாடினார். ஆனால் அந்தக் காலத்து தணிக்கை அதிகாரி அந்தப் பாடலை வெட்டி விட்டார்.”
“அழைக்கின்றார் அண்ணா” என்று ஹனீபாவை பாடவைத்து படம் எடுத்து அதை திரையிட அரசு அனுமதித்தால் திராவிட நாடு பெற்று விடுவேன்” என்று அண்ணா சொல்லுமளவுக்கு ‘மோகன’ ராகத்தில் பாடப்பட்ட அப்பாடல் சாமான்ய மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதனாலென்னவோ ஏ பீம்சிங் இயக்கத்தில் உருவான ‘அம்மையப்பன்’ படத்தில் சேர்க்கப்பட்டிருந்த அப்பாடலை தணிக்கை அதிகாரிகள் நீக்கிவிட, சற்றும் மனம் தளராமல் HMV நிறுவனத்தின் இசைத்தட்டாக ஹனீபா வெளியிட்டு தமிழக மக்களிடம் பாடலைக் கொண்டு சென்றார்.
1956இல் ‘ஆல் இந்திய ரேடியோ’வின் பெயர் அன்றைய மத்திய அரசால் ‘ஆகாசவாணி’ என்று மாற்றம் செய்த போது, தமிழகத்தில் பல கண்டனக் குரல்கள் எழுந்தன. தனது அரசியல் பயணத்தை மாணவப் பருவத்திலேயே இந்தி திணிப்பு எதிர்ப்பாளராக ஆரம்பித்தவர் நாகூர் ஹனீபா. கொதித்துப் போனார். இனிமேல், தான், தமிழர்களின் உணர்வினை மதிக்காத ‘ஆகாசவாணி’யில் பாடுவதில்லை என்று தன எதிர்ப்பை செயலிலும் காட்டினார்.
திமுகவின் வளர்ச்சியில் ஹனிபாவின் தன்னலமற்ற உழைப்பினை நன்கு உணர்ந்த பேரறிஞர் அண்ணா, 1966ல் ஹனிபா, நாகூரில் வீடு கட்டி அதற்கு ‘அண்ணா இல்லம்’ என்று பெயரும் வைக்க, ஏற்கனவே அறிவித்திருந்த நிகழ்ச்சி நிரல் எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டு நாகூருக்கு நேரில் சென்று ‘புதுமனை புகு’ விழாவில் கலந்து கொண்டார்.
‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’, ‘ஓடி வருகிறான் உதய சூரியன்…” என்று எண்ணற்ற ஹனீபாவின் பாடல்கள் திமுகவை பலப்படுத்தின. ஹனீபாவின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அவருக்கு பாடல்கள் எழுதித் தர புலவர் ஆபிதீன், சமுதாயக் கவிஞர் தா காசீம், கவிஞர் சலீம், சாரண பாஸ்கரனார், கவிஞர் அப்துல் சலாம், பேராசிரியர் கா அப்துல் கஃபூர், கவிஞர் அப்துர் ரஹீம், கவிஞர் வீரை ரஹ்மா,ன், இன்பராஜ் என்று பல நண்பர்கள் இருந்தனர்.
1961-ல் ஈ.வெ.கி. சம்பத் திமுகவிலிருந்து வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’யை துவங்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு இது. மனம் வருந்திய திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த ஹனீபா தன் நண்பர் கவிஞர் நாகூர் சலீமை அணுக, உருவான பாடல்தான் “வளர்த்த கடா மார்பில் பயந்ததடா..” பின்னர் திமுகவிலிருந்து MGR தொடங்கி வேறு பலரும் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியேற திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.
வெறும் இசைப்பணியை மட்டும் தன இயக்கப் பணியாக கொண்டிராமல், களத்திலும் சரிக்கு சமமாக இறங்கி வேலை செய்தவர் ஹனீபா. அறிஞர் அண்ணாவுடன் சேர்ந்து உரக்கப் பாடிக்கொண்டே திருச்சி மாநகரின் தெருக்களில் கைத்தறி விற்பதாகட்டும் அல்லது இந்தி எதிர்ப்பில் சிறை செல்வதாகட்டும், ஹனீபா தன்னை முழுதுமாக இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். 1957 தேர்தலில் நாகப்பட்டணத்தில், 2002 இடைத்தேர்தலில் வாணியம்பாடியில் போட்டியிட அவருக்கு கட்சி வாய்ப்பு வழங்கியது. இரண்டிலும் அவர் தோல்வியுற்றார். அவரை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி மேல்சபை உறுப்பினராக்கினார். பின்னர் அவரை வக்ப் வாரியத் தலைவராக்கியும் மகிழ்ந்தார். பெரிதும் படித்திராத ஹனீபாவிற்கு பதவிகளைத் தேடித் செல்வதில், வகிப்பதில் பெரும் ஆர்வம் இருந்ததில்லை என்கிறார் அவரது மகன் நவ்ஷாத் அலி.
திராவிட இயக்கத்தை தாண்டி ஹனீபா பெரிதும் மதித்த தலைவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள். காயிதேமில்லத்தும் ஹனீபாவின் தீவிர மாபெரும் ரசிகர். விழுப்புரத்தில் நடந்த முஸ்லீம் லீக் மாநாத்தில் ஹனீபாவின் பாடலை கேட்டு உறங்க முடியாமல் அவரை நள்ளிரவில் மீண்டும் பாடக் கேட்டு மகிழ்ந்தவர். ‘இதுதான் நங்கள் செய்த துரோகமா?’ மற்றும் ‘மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே’ ஆகிய பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்த ஹனீபாவின் பாடல்கள்.
தனது கம்பீரம் பொங்கும் குரலால் தனக்கென்று இசைத்துறையில் ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்ட ஹனீபாவிற்கு குலேபகாவலி, பாவமன்னிப்பு, தர்ம சீலன், என்றென்றும் காதல், செம்பருத்தி, ராமன் அப்துல்லா என பல திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக்களும் வந்தன. திரையுலகப் பிரவேசத்திற்கு முன்னதாகவே இசைத்தட்டுக்காக இசைமுரசுவின் பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜிவின் இசையில் ‘அல்லாஹு அக்பர்’ என்ற படத்திற்கு ஹனீபா ஆறு பாடல்கள் பாடியிருக்கிறார். அப்படம் இதுவரை வெளிவரவில்லை.
கட்சிப் பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட காலத்திலும் இஸ்லாமிய பாடல்களை பாடுவதிலும் இனிய தமிழ் பாடல்களை பாடுவதிலும் தொடர்ந்து பணியாற்றினார். பாரதிதாசன் மற்றும் குணங்குடி மஸ்தான் சாகிபு ஆகியோரின் பாடல்களையும், பிற இஸ்லாமிய பாடல்களையும் பாடுவது மட்டுமின்றி இசைத்தட்டாகவும் வெளியிட ஆரம்பித்தார். அவ்வாறு ஹனீபா மெனக்கெட்டு மெட்டமைத்த பாடல், மதங்களைக் கடந்து அவருக்கு இரசிகர்களை பெற்றுத் தந்த பாடல்தான் “இறைவனிடம் கையேந்துங்கள் ….”. குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனம் மகா குரு சோமசுந்தரத் தம்பிரான், என்று மதங்களைக் கடந்தும் கடல் கடந்தும் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் ஹனீபாவின் பாடலுக்கு இரசிகர்கள் உண்டு.
இவ்வாறு சாமானியர்கள், தலைவர்கள், துறவிகள், இசைக் கலைஞர்கள் என்று பலரும் வியந்து பாராட்டிய ஹனீபாவின் இசை குறித்து ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய தரப்பினரிடையே விமர்சனம் இருந்தது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.இத்தனைக்கும் சிறுபிராயத்திலிருந்தே இஸ்லாமிய மார்க்க நெறிகளான ஐவேளை தொழுகை, நோன்பு, ஜகாத் போன்றவற்றை தவறாது பின்பற்றிவருபவர் ஹனீபா. அவர் பாடகராக உருவாகக் காரணமே, தனது பள்ளிகூடப் பிரார்த்தனையில் இஸ்லாமிய பாடல்கள் பாடப்பட வேண்டும், என்ற அவரது உரிமை குரல்தான் என்பதை அறிந்த எவருக்குமே, ஹனீபாவின் பாடலுக்கு இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த சிலரிடமிருந்தே எதிர்ப்பு என்பது விந்தையிலும் விந்தை. இஸ்லாமிய சமூகத்துக்குள் நீண்ட காலமாகவே இசை குறித்து மாறுபட்ட பார்வைகள் உண்டு. பாடுவதே ‘ஹராம்’ (தடுக்கபப்ட்டது) என்று எண்ணம் உடைய சில இஸ்லாமியர், ஹனீபாவை விமர்சித்து வந்தனர்.. அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் B H அப்துல் அமீதுக்கு அளித்த பேட்டியில், “நான் பாடுவது கூட சில உலமாக்கள் இது ஆகுமா? ஆகாதா? என்ற சர்ச்சையில் இருக்கின்றார்கள். எல்லா உலமாக்களும் கூடி இந்த இசைத்துறையைக் கூடாது என்று சொன்னால் அன்றைக்கே நான் நிறுத்திக் கொள்வேன்”, என்று ஹனீபா தனது நிலைப்பாட்டினை தெளிவு படுத்தினார்.
தனது இசைக்கச்சேரிகள் மூலம் கல்விக் கூடங்களுக்கும், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் நிதி திரட்டுவதற்காக, இலவசமாக பல இசைநிகழ்ச்சிகள் நடத்திய பெருமையும் ஹனீபாவிற்கு உண்டு.
தமிழக வரலாற்றில் பாடல்கள் மூலம் ஒரு அரை நூற்றாண்டுக்கும் மேலாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இசை முரசு ஹனீபா தனது 90வது வயதில் காலமானார். இசையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய ஹனீபா, திராவிட இயக்க வரலாற்றிலும், தமிழக இஸ்லாமியர் வாழ்விலும் நீங்காத இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை.
(இந்து தமிழ் திசையில் 25 – 12 – 2024 அன்று வெளி வந்த கட்டுரையுடன் சில கூடுதல் தகவலையும் சேர்த்து)
